Monday, October 21, 2024

5.12 புத்தக விமர்சனம்

வணக்கம். நான் இன்று நான் திரு எம் கே குமார் எழுதிய 5.12 புத்தகத்தைப் பற்றி பேசப் போகிறேன். முதலில் ஏன் இந்த புத்தகம்?

புத்தகங்களுள் மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் பற்றி வாசிக்க எனக்கு மிகவும் பிடித்தம். மனிதனாக, நமக்கு உண்டாகும் அனுபவங்கள் எதுவும் நமக்கு மட்டும் உண்டாகிற அனுபவங்களோ, இதற்கு முன் யாருக்குமே உண்டாகாத அனுபவங்களோ அல்ல. நம்முடைய வாழ்வு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பு என உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில், நான் ஜெர்மனியை விட்டு தப்பியோடி பெரும் வெற்றிக் கண்ட ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறும் வாசித்திருக்கிறேன், அதே ஹிட்லரின் அடக்குமுறையில் ஜெர்மனியைவிட்டு தப்பியோடி சூழ்ச்சியில் உயிரிழந்த இலக்கியவாதி தோழர் டொரா பாபியனின் வாழ்வியலும் வாசித்திருக்கிறேன். மனிதர்கள் தங்கள் அசாதாரணச் சூழ்லில் எப்படி இயங்குகிறார்கள் என்பதற்கும், நம் எல்லைகளைப் புரிந்து கொள்வதற்கும் இத்தகைய புத்தகங்கள் பெரும்பாடம்.


ஆனால் சாதாரண சூழ்நிலைகளில் மனிதர்கள் இயங்கும் விதம் அந்த வாழ்விடத்தின் கலாச்சாரத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், நம் வாழும் சூழலும் அதன் கலாச்சாரத்தின் பிம்பமும் தொகுக்கப்பட வேண்டியவை. திரு எம்  கே குமாரின் புத்தகங்களை நான் அவ்வாறு தான் பார்க்கிறேன்.  சிங்கப்பூரில் இலக்கியத்துக்கான சிறந்த கூறுகள் இருக்கிறது எனப் பல கற்பிதங்களை அவரின் எழுத்து வழியே அறிந்துக் கொள்கிறேன். அவருடைய 5.12 யானாலும், ஓந்தி ஆனாலும், அவை என்னளவில் நிறைய கேள்விகளை விதைத்தவை.


இப்போது 5.12 க்குள் செல்வோம். மொத்தம் 13 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. திரு எம் கே குமார் அவர்கள் பல தளங்களில் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. அத்தனையும் சிங்கப்பூர் சூழலிலேயே அமைந்திருப்பது தனிச் சிறப்பு. 13 கதைகளையும் ஒரே நூலில் இணைக்க வேண்டுமெனில், இரண்டு விடயங்களால் இணைந்திருக்கின்றன. முதல் இணைப்பு, நான் முன்னமே சொன்னதுபோல சிங்கப்பூர் சூழல், இரண்டாவது இலைமறை காய்மறையாகப் பகடி- அதனைக் குசும்பு என்றும் வைத்துக் கொள்ளலாம்.


முதல் கதை: அப்யாசிகள். அப்யாசிகள் என்றால் தாங்கள் கடைப்பிடிப்பவற்றைப் பயிற்றுவிப்பவர்கள். புத்தகத்தை முதன்முதலில் வாசித்து முடித்த பின்பு இந்த கதை மட்டுமே எனக்குள் மேலெழுந்து நின்றது. இந்த கதையில் நம் மீது திணிக்கப்பட்ட சில அடிப்படை நம்பிக்கைகளின் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மதம், மதத்தின் மூலம் கடவுள் நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் மூலம் நமக்குள் எழும் ஆன்மீகம் பற்றிய எழுத்தாளரின் தெளிவு என்னை பெரிதும் அசைத்துவிட்டது. இதனை உணர்வதே பெரும் வரம், அதனை இத்தனை நேர்த்தியாக எழுதுவது என்பது பிரமிப்பாக இருந்தது. ஒரே ஒரு பத்தியை வாசிக்கிறேன். 


கோயிலுக்குச் சென்று கடவுள் உருவத்தைப்பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறோம், அப்படித்தானே! அப்புறம் என்ன செய்கிறோம்? கண்களின் வழியாக, சிந்தனைகளின் வழியாக எண்ணங்களை ஒருமுகப்படுத்தி நமக்கு வேண்டியவற்றைக் கேட்கிறோம், இல்லையா? கிடைத்தவற்றுக்கு நன்றி சொல்கிறோம், இல்லையா? ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நம் மனத்தில் நிற்பது நமது எண்ணங்களே அன்றிக் கடவுளுருவா என்ன? 


என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். இது பகடி அல்ல. அவர் கேட்கும் கேள்விகளின் மூலம், அந்த கேள்விகளுக்கான முனைப்பை நமக்குள் கடத்துகிறார். கேள்விகளுக்கான விடைகளை நமக்குள் தேடினாலே கண்டுகொள்ளலாம்!


அலுமினியப் பறவை என்னும் கதை. இது திரு பா உதயகண்ணன் தொகுத்த உலகத்தமிழ் சிறுகதைகள் 25யில் இடம்பெற்ற சிறுகதை. சிங்கப்பூர் ஆசியாவின் வாய்ப்புகளின் சொர்க்கம் என ஊரில் அறியப்பட்டாலும், வாய்ப்புகளை நோக்கி செல்லும் பாதை அத்தனை எளிதல்ல என்பது காட்சியாக விரிகிறது, அலுமினியப்பறவை கதையில். சிங்கப்பூர் வரவேண்டும் என முடிவு செய்தவுடனேயே அல்லல் ஆரம்பம் ஆகிறது. அந்த கதையில் வரும், “இத்தனை பெரிய உருவம் பறக்கிறது என்று சொன்னால் நம்ப முடியவில்லைஎன்ற ஒற்றை வரியில், அலுமினியப் பறவை என விளிக்கப்பட்டது விமானமா, அல்லது அத்தனை சுமையையும் சுமந்துகொண்டு சுந்தர் இயங்குவதைக் குறிக்கிறதா என ஐயம் ஏற்படுகிறது. 


நல்லிணக்கம் என்னும் ஒரு கதை, இந்த கதை, “இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது.” என ஆரம்பித்து, நகைச்சுவையாய் விரிகிறது, கதை! பல பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு பாத்திரமும் சிங்கப்பூரின் ஒரு அங்கத்தின் பிரதிநிதி. 


மோர்கன் எனும் ஆசான் எனும் கதையில் மொர்கனாகத் தன்னை நம்பும் தமிழ் சமூகத்தைச் சார்ந்த மோகன் எனும் பாதுகாவலருக்கு, ஊரிலிருந்து வந்து முட்டி மோதி வளர்ச்சிகாணும் செந்திலின் மேல் வரும் எரிச்சலும், அதனால் தன்னுடைய இன அடையாளத்தை மாற்ற முயற்சிசெய்வதும், அந்த அடையாளத்தின் நிமித்தம் செந்திலின் மீது அவர் செலுத்த விரும்பும் தன்னுடைய ஆதிக்கத்தையும், அவருடைய குழப்பதினூடே அவர் செய்யும் சிறு தவறும், அந்த தவறின்மூலம் அவருடைய அடையாளமே கேள்விக்குறியாக்கப்படுவதும் என விரிகிறது கதை! இன, குழு அடையாளம் என்பதே பிம்பங்கள் தான் அல்லவா? பிம்பங்கள் என்றும் நிலையற்றவை, அல்லவா?


இப்படி சிங்கப்பூர் சூழலில் அமைந்திருக்கின்ற கதைகளில், ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு பணி செய்பவர் முதன்மையாக முன்னிறுத்தப்படுகிறார். வணிகம் சார்ந்த இந்த நகரத்தில், ஒவ்வொரு பணியிலும் இருக்கும் சவால்களையும் இக்கதைகள் மூலம் சிறிதேனும் அறிந்து கொள்ளலாம். ஆனால், எங்கேயும் சலிப்புத் தட்டாமல், நகைச்சுவையோடும், சிறு பகடியோடும் அளித்திருக்கிறார். குறிப்பாக, விவரிப்புகள். உதாரணமாக, எல்லா கதையிலும் வரும் மனிதர்களைப் பற்றிய விவரிப்புகளும், அலுமினியப்பறவை கதையில் விமானத்தைப் பற்றிய விவரிப்புகளும், மோர்கன் கதையில் வரும் கணினி செயல்பாடுகள் பற்றிய விவரிப்புகளும் அருமை. முக்கியமாக, சுழற்சி கதையில் வரும் சிவாண்ணனின் விவரிப்பில் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டாவதைத் தடுக்க முடியவில்லை.


சுருக்கமாக, 5.12 யில் இருக்கும் கதைகளும், கதை மாந்தர்களும் நம்மை கொஞ்சம் அசைக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொறு கதையுமே நமக்குள் கேள்விகளை எழுப்பும். கேள்விகளுக்கான விடைகளைத் தேட முற்படுவோம். கண்டிப்பாக வாசித்து மகிழுங்கள்.

No comments:

Post a Comment