கிராமத்தில்
இருந்த தாத்தாவின் வீட்டில் திண்ணைகள் பலவுண்டு. பகலில் சதா அந்த திண்ணைகளை ஆக்கிரமத்துக்
கொண்டிருப்போம். திண்ணைகளுக்குக் கீழே முன்வாசலுக்கும் புறவாசலுக்கும் நடுவில் நீண்ட
பாதை. இருபுறமும் தலா இரண்டு வீடுகள். ஒரு வீட்டில் மட்டும் எங்கள் குடும்பம் வசித்தோம்.
இரவானால், அந்த பாதை நெடுக பாய் விரித்து, வெட்டவெளியை வெறித்தபடி, படுத்து உறங்குவோம்.
அதிகாலையில் தண்ணீர் உலவ நல்லசிங்கம் அண்ணன் வருவார். சண்முகநாதன் அண்ணனும் வருவார்.
எங்களைத் தாண்டி, இரு கைகளில் குடங்களுடன் அவர்கள் எவ்வாறு தண்ணீர் உலவினார்கள் என்பது
இன்றளவும் வியப்பே!
எங்களுக்கு
முடித்திருத்தம் செய்ய நாவிதர் ஒருவர் வருவார். வயது வித்தியாசமின்றி, அவரை அனைவரும்
அம்பட்டையன் என்றே அழைப்போம். அவருக்குக் காது சிறிது மந்தம். அதிகம் பேச மாட்டார்.
வேலையை முடித்தப்பின்னர் சலனமில்லாமல் சென்று விடுவார். எங்கள் வீட்டிலிருந்து சிறு
தொலைவில் ஒரு கற்சுவருக்குப் பின் அவர், அவர் மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன்
வாடகைக்கு வசித்து வந்தார் என்பது மட்டும் தெரியும்.
தினமும்
இரவு 7 மணிக்கு ஒரு பாத்திரத்துடன் தாவணி அணிந்த பெண் ஒருவர் வந்து படிகளின் கீழ் நின்றுக்கொண்டு,
‘பழையது வாங்க வந்தேன் தாயீ’ என்பார். சிறிது நேரத்தில் சித்தி, நீர்த்த சோற்றையோ,
மதியம் மீந்த சோற்றையோ கொட்டிவிட்டு செல்வார்கள். அதே பாத்திரத்துடன் இன்னும் பல வீடுகளுக்குச்
சென்று பழையது வாங்குவார் அந்த பெண். நாங்கள் சிறு வயதாயிருக்கும்போது அவரைப் பார்த்தவுடன்,
‘பழையது வாங்க வந்தேன் தாயீ’ என்று கூட்டமாகக் கத்துவோம். அது அவர்களுக்கு அவமானமாய்
இருக்கும் என்பதையே உணர பல வருடங்கள் ஆனது. அதை உணரும்போது, அவர்கள் அம்பட்டயனின் மகளென்றும்,
அவர்கள் பெயர் மாரியம்மா என்பதும் அறிந்துக்கொண்டேன்.
தாத்தா
மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, இதே அம்பட்டயன் வந்து தான் தாத்தாவை சுத்தப்படுத்துவார்.
தாத்தாவுக்கு நடக்கமுடியாமல் போனபோது, அவரது 6 மகன்களில் ஒருவர் கூட அவரைத் தாங்கிக்கொண்டு
கழிவறைக்கோ, குளியலறைக்கோ, கூட்டிச் செல்லவில்லை. அத்தனையும், அம்பட்டயனே செய்தார்.
அப்பொது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அம்பட்டயன், அப்போது தான் எனக்கு
அம்பட்டயன் தாத்தாவாக பரிணமித்து இருந்தார். அதன் பின்பு, தாத்தாவும் இறந்து விட்டார்.
நானும் அதிகம் விடுதிகளில் தங்கிப் படித்து வந்ததால், கிராமம் செல்வதுக் குறைந்தது.
போன
வருடம் மாரியம்மா அக்காவைப் பார்க்க நேர்ந்தது. அம்பட்டயன் தாத்தா இறந்து விட்டிருந்ததை
அறிந்துக் கொண்டேன். மாரியம்மா அக்காவின் மகள் BSc (Nursing) படித்துக்கொண்டிருப்பதாக
சொன்னார்கள். மகன் polytechnic முடித்துவிட்டு,
தங்கையின் படிப்பிற்குக் கட்டணம் செலுத்தும் அளவிற்கு சம்பாதிப்பதாக சொன்னார்கள். சமத்துவபுரத்தில்
ஒரு வீடும் கிட்டியது அவர்களுக்கு. இதைத்தான் நான் வளர்ச்சியாகப் பார்க்கிறேன். இதைத்தான்
சமூகநீதியின் வெற்றியாகக் காண்கிறேன். இதைத்தான்
இலவசங்களின் வெற்றியாகக் காண்கிறேன்.
எங்கள் வீட்டில் என் அப்பா தலைமுறை தான் படித்த முதல் தலைமுறை. எங்கள் தலைமுறையினர் இருக்கும் opportunities ஐ புரிந்துக்கொள்ளும் வேளையில், எங்கள் தாத்தா தலைமுறையில் படித்த குடும்பங்கள் எங்கோ சென்றுவிட்டனர். அம்பட்டயனின் வழித்தோன்றல்களில் முதல் தலைமுறை அவமதிப்பின்றி, பல வீட்டின் பழையது கலந்து
உண்ணாமல், பிடித்தோ, பிடிக்காமலோ, ஒரு degree வாங்குவதற்குள், எங்கள் வீட்டின் 3ஆவது
தலைமுறை தனக்குப்பிடித்த degree வாங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் எட்டாக்கனியாக கிடைத்ததைப்
படிக்க நினைக்கையில், இங்கு நினைத்ததைப் படிக்க ஆரம்பித்தோம். இந்த சமூக இடைவெளியைத் தான் நொறுக்க வேண்டும். ஆகையால், நாடு முழு வளர்ச்சிப்
பெற வேண்டுமாயின், இந்த சமூக நீதி நிலையுறுத்தும் இட ஒதுக்கீடு மிக மிக அவசியமாகத்
தொடர வேண்டும்.
No comments:
Post a Comment