நானும் அவனும் கடற்கரைக்குச் சென்றோம்:
அவன் ஒரு நத்தைப் பிடித்தான்,
நான் சில சிப்பிகள் பொருக்கினேன்.
நானும் அவனும் தோட்டம் சென்றோம்:
அவன் ஒரு இளநீர் அருந்தினான்,
நான் ஒரு கொய்யா உண்டேன்.
நானும் அவனும் பாராசூட்டில் பறந்தோம்:
அவன் பறவையைக் கண்டு குதூகலித்தான்,
நான் வானத்தின் வண்ணங்களைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.
நானும் அவனும் ஒரு படம் பார்த்தோம்:
அவன் அதன் ஓர் காட்சியை உள்வாங்கி வரைந்தான்,
நான் அதன் ஒரு உரையாடலில் குறிப்பிடப்பட்ட புத்தகத்தைப் படித்தேன்.
நானும் அவனும் மொட்டைமாடியில் உலவினோம்:
அவன் இரவின் நிசப்தத்தை சுவாசித்தான்,
நான் இருளின் ஒளியை சிலாகித்தேன்.
நானும் அவனும் தனித்தனி,
எங்கள் தேடல்கள் வெவ்வேறு,
எனினும், எல்லா சூழ்நிலையிலும்...
அவரவருக்கானவைகளை அருளிக் கொண்டே இருக்கிறது
விந்தைமிகு வள்ளலான இவ்வுலகு!
- 21/08/2021
No comments:
Post a Comment