வளங்கள், செல்வங்கள், தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பங்கள் போன்றவை அதிகதிகமாக கொழிக்கும் சிங்கப்பூரில் மிக முக்கியமான மனிதம் மிக அரிதாக காணக்கிடைக்கும். மிக கொடிய தனிமை நிதர்சனமாக பரவிக் கிடக்கும். ஆவைகளின் ஆவணமாகத் தான் நான் ஓந்தி நூலைப் பார்க்கிறேன். 8 சிறுகதைகளையும், 1 குறுநாவலையும் கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு கதையிலும், ஒவ்வொரு கதை மாந்தரிலும் தனிமை ஆழ வேரூன்றி அதிகாரமாய் ஏவுகிறது. தனிமையின் பிடியில் இருக்கும் மனிதர்களின் வெவ்வெறு எதிர்வினைகள், அவ்வெதிர்வினைகள் ஏற்படுத்தும் மன உளைச்சல்கள், இறுக்கங்கள், அதிர்வலைகள், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் வினைகள் என விரிந்துக் கொண்டே போகிறது. இத்தகையான தனிமை ஆட்கொண்டிருக்கும் உலகில், நாம் பொதுவாக பேசத் தயங்கும் பாலியல் தேவைகளும், அவற்றினிமித்தம் எற்படும் அவமானமான எண்ணங்களும், மிருகங்களாக உருவகப்படுத்தப்பட்டு, சொல்லப்பட்டிருகின்றன.
‘தொல்குடி’ என்ற முதல் கதை, மோகன்தாஸ் என்னும் ஒரு அசிரியர், தன் மனைவியின் மறைவிற்குப் பின்பாக அனுபவிக்கும் தனிமையின் துயரை வார்த்தைகளால் காட்சிபடுத்துகிறது. அவரிடம் செல்வத்துக்குக் குறைவில்லை– குழந்தைகள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள், சிங்கப்பூரில் தனி வீட்டில் வசிக்கிறார். ஆனால், தாங்கொன்னா கொடும் துயரமாய் தனிமை வதைக்கிறது. ஆசிரியராய் இருப்பதினால் உண்டாகிற பிம்பக்கட்டுபாடுகளால், மனைவியிடம் அவரின் நேசத்தைச் சொல்ல முடியாததை ‘மலையுச்சிக்குன்றுக்கு நடுவே கிடக்கும் சுனைபோல மனதில் அவருக்கு அது தேங்கிக் கிடந்தது’ என்ற ஒற்றை வரி கச்சிதமாகக் கடத்துகிறது.
ஒவ்வொரு கதையிலும், மனிதர்களிடம் உரையாட வாய்ப்பற்று, மனதிலுள்ள உரையாடல்களே மேலெழுந்து உள்ளன - தனிமையை அறைந்துசொல்லும்படி. என்னை மிகவும் பாதித்தது விஷம் கதை. சிங்கப்பூரின் பிரமாண்டத்தை காட்சிப்படுத்திவிட்டு, முதல் முதலாக சிங்கப்பூர் வரும் ஒருவரின் ஆச்சிரியங்களும், சுற்றியிருக்கும் தேவையற்ற சலிப்பையூட்டும் தேர்வுகளும் அருமையாக உணர்த்தப்படுகின்றன. அத்தனைத் தேர்வுகளும், இவரையோ, அவரிடம் தனிமையைக் கொல்ல உறவிற்கு விண்ணப்பிக்கும் அந்த மூத்தவருக்கோ ஒரு பொருட்டாக இல்லை. சுதந்திரம் என்பது தேர்வு செய்ய முடிகிற தருணங்களால் ஆனது என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தியில் ஓங்கி அறைகிறது இந்த கதை.
இதைப் போல ஒவ்வொரு கதையும் அதினுள் பல ஆழமான சிந்தனைகளை விதைக்கின்றன, உதாரணமாக, ஓந்தி கதையில் மனிதர்கள் ஆணோ, பெண்ணோ தங்களளவில் ஒரு மிருகத்தை வளர்த்து வருகிறார்கள் என்பது மேம்போக்காக சொல்லப்பட்டாலும், அதனை கூர்ந்து கவனித்தால், சமூகத்தின் தார்மீக நிலைப்பாட்டால், தனிமனிதன் படும் வலிகளும், அதனால் ஏற்படும் நிர்பந்தங்களும் விளங்கும். இத்தகைய புரிதல்கள், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஏற்புகளைக் கேள்விக்குள்ளாக்கின்றன. மனிதத் தேவைகளின், உள்ளார்ந்த எண்ணங்களை, ஒளித்துவைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஆழ்மன ஆவல்களை சங்கடங்களின்றி, அவமானமின்றி, இச்கமூகம் பேசுப்பொருளாக்க வேண்டும் என்கிற நகர்வை முன்னெடுக்க இந்த புத்தகம் முயல்கிறது, என்பதை என்னளவில் புரிந்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர்களில் ஏற்படுத்தும் விளைவுகளை மிக கவனமாகக் கோடிட்டுக்காட்டுகிறது. வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடும், தங்களின் வளர்ச்சிக்கு ஏற்பத் தனிமனிதத் தேவைகளுக்கும் கவனம் கொடுக்க வேண்டிவயதின் அவசிவயத்தையும் வலியுறுத்துகிறது.
ஓவ்வொரு கதையிலும் சிங்கப்பூரின் வரலாற்றுக் குறிப்புகள் சிதறிக் கிடக்கின்றன. வீட்டுமனைகளின் விலையேற்றம், இயூடி பகுதியில் ஜப்பானியர்கள் எண்ணெய் சேமித்து வைத்தது, LTA விதிமுறைகள், இந்த நாட்டின் அவசரப்போக்குகள் எனப் பல பல.
சிங்கப்பூரில் தரமான இலக்கியம் சாத்தியமா என்றொரு எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு – மிக இயந்திரத்தனமான வாழ்க்கையில், கலை ஒளியிழந்துப்போகும் என்பதால். ஆனால், அவ்வியந்திரத்தனத்தையும் ஆவணப்படுத்துவது, ஒரு உரையாடல் நிகழ வழிவகுக்கும் என்னும் வகையில், இந்த ஓந்தி மிகச் சிறந்த தொகுப்பு.
No comments:
Post a Comment