Saturday, September 2, 2023

எல்லைகள்

 “படித்தால் தான் நெடிய வாழ்வை சுயமாய் வாழ முடியும்,” என்ற அம்மா,
நான் முனைவர் பட்டம் நோக்கி ஓட எத்தனிக்கையில்,
“இதெல்லாம் எதற்கு? படித்ததுப் போதும்,” என சொல்லும்போது தான் புரிந்தது,
அவர் வரையறுத்த எல்லைக்குள் சுயமாய் வாழச் சொல்கிறார் என.
 
“எல்லையை சுருக்காதே, விரிந்து செல்,” எனத் தட்டிக் கொடுத்த கணவர்,
வேலையில் மின்னி, விடுப்பட்ட வீட்டு வேலைகள் தேங்கிப் போகையில்,
“சொன்னால் தானே தெரியும், உன் வீட்டுவேலைகளில் என்ன உதவி வேண்டும் என,” எனச் சொல்லும்போது தான் புரிந்தது,
என் எல்லையை அவர் அனுமதிக்கும் விளிம்பு வரை விரிக்கலாம் என.
 
வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டிற்குள்,
சமைக்கணும், பாத்திரம் விளக்கணும்,
குழந்தைகளின் உணவு, உடுப்பு, வீட்டுப்பாடம் கவனிக்கணும், 
அம்மா-அப்பா, மாமா-மாமியைக் கவனிக்கணும்,
பலசரக்குப் பொருட்கள், காய்கறிகள் இருப்பை உறுதி செய்யணும்,
ஒவ்வொரு நாளும் 3 வேளைக்கான உணவை திட்டமிடணும்,
மாவு அரைக்கணும், துணி மடிக்கணும்,
சமைக்கணும், பாத்திரம் விளக்கணும்!
இத்தனைக்கும் நடுவில், வேலையில் மிளிரணும்.
(வீட்டு வேலை உதவிக்கென்று ஆளே இருந்தாலும்)
இந்தப்பட்டியலின் பாரத்தையும் தலையில் சுமந்தப்படியே!

No comments:

Post a Comment